கூட்டமைப்பை விமர்சிப்பது போன்று ஏனைய கட்சிகளை விமர்சித்தால் அவர்கள் கடத்தப்படலாம்: பா.அரியநேத்திரன்
மட்டக்களப்பு அரசடித்தீவு, விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற உடல் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பை யார் வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம். விரும்பினால் கூட்டமைப்பு வேட்பாளர்களின் கொடும்பாவியைக் கூட எரிக்கலாம். எங்களிடம் ஆயுதங்கள் இல்லை மக்கள் பலம் மட்டும்தான் உண்டு.
எனவே, கூட்டமைப்பை பற்றி எவரும் எந்த இடத்திலும் விமர்சித்து பேசலாம். உதாரணமாகக் கூறவேண்டுமானால் காத்தான்குடியில் பிறந்த அமைச்சர் கிஸ்புல்லா மகிழடித்தீவில் வந்து கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு உரிமையுண்டு. அதேபோன்று ஓட்டமாவடியில் பிறந்த சுபைர் கடுக்கமுனை வாணிவித்தியாலயத்தில் வந்து கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு உரிமையுண்டு.
இதேபோன்று சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளும், அரசாங்கமும் கூட கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு உரிமையுண்டு. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராகிய நான் காத்தான்குடிக்கு சென்று அமைச்சர் ஹிஸ்புல்லாவையோ அல்லது ஓட்டமாவடிக்கு சென்று சுபைரையோ அல்லது வேறு இடத்திற்கு சென்று அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களையோ விமர்சிக்க முடியாது.
எனவே ஜனநாயகக் கட்சியென்று சொல்லக் கூடிய தகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டும்தான் உண்டு. ஆனால் இலங்கையில் வேறு எந்த கட்சியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதைப் போன்று விமர்சிப்பார்களேயானால், அவர்கள் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்படலாம் அல்லது கடத்தப்படலாம் அல்லது கொலைசெய்யப்படலாம் அல்லது வெளிநாட்டிற்கு தாப்பியோடவேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
இது தனிநபராக இருந்தாலும் சரி கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழ், சிங்கள ஊடகங்களாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் இதே நிலைதான். இந்த பயம் காரணமாகத்தான் இன்று இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகள் உட்பட தமிழ் ஊடகங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் என எல்லோரும் கூட்டமைப்பை தங்கள் விரும்பியபடி விமர்சிக்கின்றனர்.
இன்று இலங்கையில் எல்லாக்கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஜனநாயகப் போக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. இந்த ஜனநாயகப் போக்குத்தான் இன்று ஜெனிவா உட்பட உலகம் முழுவதும் கூட்டமைப்பை, இலங்கை அரசுக்கு சமமாக மதித்து நடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் அதிபர் வீ.கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு கல்விப்பணிப்பாளர் தேவசிங்கம், மண்முனை மேற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச தவிசாளர் எ.பேரின்பராசா ஆகியோருடன் பெற்றோர் அசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












