தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு.
இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார்.
சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இரண்டாம் இணைப்பு:
யாழ்ப்பாணத்தில் வைத்து மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சியான பொங்கும் பூம்புனல் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திறம்பட வழங்கியதில், ராஜேஸ்வரி சண்முகம் பிரபல்யம் பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்துக்கு சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு காலமானார். அவரின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.