இறுதிப்போர் சுயாதீன விசாரணைக்கு இந்தியா, இலங்கையை இசையச் செய்ய வேண்டும்: தெ டிப்ளொமெட்
இலங்கையின் உள்நாட்டு போருக்கு இந்தியா பாரிய உதவிகளை அளித்துள்ளது.
இந்தியா, இலங்கையின் போருக்கு ஆயுத உதவிகளை வழங்கவில்லை என்று கூறிவந்தபோதும் இந்தியா வழங்கிய எம்ஐ 17 ரக ஐந்து ஹெலிகொப்டர்கள் மூலமே விடுதலைப்புலிகளின் பல தடைகளை இலங்கைப்படையினரால் தகர்க்கமுடிந்தது என்று தெ டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக நிட்டின் குஹ்லே என்ற செய்தியாளர் எழுதிய இலங்கை தொடர்பான “போரில் இருந்து சமாதானம்” என்று நூலை டிப்ளொமெட் சுட்டிக்காட்டியுள்ளது.
2006 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தநூலில் குஹ்லே இந்தியா, இலங்கைக்கு 5 எம் ஐ 17 ஹெலிகொப்டர்களை விடுதலைப் புலிகளுக்கான போரில் பயன்படுத்துவதற்காக வழங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெ டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் இறுதிப்போரில் பொதுமக்கள் பாரியளவில் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபை தாமே முன்வந்து இறுதிப்போரின் போது பொதுமக்களை பாதுகாக்க தாம் தவறிவிட்டமையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை மீது வரலாற்று ரீதியான செல்வாக்கை கொண்டுள்ள இந்தியா, ஐக்கிய நாடுகளில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை பெறுமதிவாய்ந்த நிகழ்வாகும்.
இது இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா காட்டிய அதிருப்தியாகவும் இருக்கலாம்.
எனினும் தொடர்ந்தும் கொழும்பு அரசாங்கத்தில் தமது செல்வாக்கை செலுத்தி வரும் இந்தியா, இறுதிப்போரின் மீறல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைக்கு இலங்கையை இசையச்செய்ய வேண்டியது அவசியம் என்று தெ டிப்ளொமெட்டின் செய்தியாளர் பிரட்யுஸ் என்பவர் வலியுறுத்தியுள்ளார்.