இலங்கைக் கடல் பகுதியிலும் மீன்பிடிக்கக் கோரி தொடரும் தமிழக மீனவர்களின் வேலைநிறுத்தம்
தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை பகுதிக்குச் செல்வதால் அசாதாரண சூழல் ஏற்படுகிறது, எந்தக் காரணத்துக்காகவும் தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டக் கூடாது எனவும் மீன்வளத் துறை மூலம் மீனவர்களுக்கு அண்மையில் அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நாகை வட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம், நாகை அக்கரைப்பேட்டையில் நடைபெற்றது.
இதில் இலங்கைக் கடல் எல்லையிலும் தமிழக மீன்பிடி விசைப் படகுகளுக்கு மீன்பிடி உரிமை வழங்க வேண்டும். இது தொடர்பாக இந்தியா, இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்துக்குள்பட்ட 8 மீனவக் கிராமங்களையும் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, கடந்த டிசம்பர் 30ஆம் தேதியிலிருந்து தொடங்கிய வேலை நிறுத்தத்தால் சுமார் 600-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.
பைபர் படகு மூலமான மீன்பிடித் தொழில் தினத் தொழிலாக (இரவு தங்காமல்) நடைபெறுவதால், உள்நாட்டு உணவுத் தேவைக்கான மீன் தேவையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இருப்பினும், மீன் ஏற்றுமதி மற்றும் அதைச் சார்ந்த ஐஸ் கட்டி உற்பத்தித் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

