
இது தொடர்பில் மனோ கணேசன் பா.உ. விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆகியவை ஒருபுறமாகவும், ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவை இன்னொரு புறமாகவும் 13வது திருத்தம் தொடர்பில் பகிரங்கமாக முரண்பட்டு நிற்கின்றன.
அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மூலமாகவும், ஊடக நண்பர்கள் மூலமாகவும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ள எங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் தமது கூட்டணிக்குள் இருக்கும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி முடிவு காண வேண்டும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் மாகாணசபைகளுக்கு மேலதிக அதிகாரங்களை கோருகின்றார்கள். இது 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாகும். இதை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இந்தியாவிற்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருந்தார். இன்று இதை ஜனாதிபதியும் மறந்துவிட்டார். இந்திய அரசாங்கமும் மறந்துவிட்டது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்லவேண்டிய தேவையை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். சரத் பொன்சேகாவின் இந்த கருத்தை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவும், தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்சவும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
விமல் வீரவங்ச ஒருபடி மேலேபோய் சரத் பொன்சேகாவின் இந்நிலைப்பாடு ஜேவிபிக்கு ஏற்புடையதா என்ற மேதாவித்தமான கேள்வியையும் எழுப்பி, பொது வேட்பாளர் தொடர்பிலே முரண்பாடு எற்பட்டுள்ளதாக கூறுகின்றார்.
ஆனால் உண்மையிலேயே ஆளுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள்ளே இருக்கும் கட்சிகள் மத்தியில்தான் முரண்பாடு பகிரங்கமாக இருக்கின்றது.
தேசிய இனப்பிரச்சினை தீர்வு என்பது 13வது திருத்தத்திற்கு அப்பால் செல்லப்போகின்றதா இல்லையா என்பது பற்றி ஆளும் கூட்டணியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களுக்கு இதை தெளிவாக தெரிவிக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் நியமனத்திற்கு முன் தெரிவிக்கவேண்டும்.
தமிழ் மக்கள் சம்பிக்க ரணவக்கவையும், விமல் வீரவன்சவையுயும் கணக்கில் எடுக்கப்போவதில்லை. இவர்களை நாங்கள் அரசியல்வாதிகளாகவே பார்ப்பதில்லை.
ஆனால் ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தமிழ் மக்களின் வாக்குகளை கோருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு இது தொடர்பில் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.
அமைச்சாகள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான், பெ.சந்திரசேகரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களான சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரது பதில்கள் தமிழ் மக்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்.
இன்று போர் முடிவிற்கு வந்துவிட்டது. இனிமேலும் தேசிய இனப்பிரச்சிiயை வைத்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் அரசியல் சித்துவிளையாட்டு விளையாட முடியாது. பாம்பிற்கு வாலையும், கீரிக்கு தலையையும் காட்டி அரசியல் நடத்த முடியாது.
தெளிவான அரசியல் காரணங்கள் இல்லாமல் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தமிழ் மக்கள் கண்களை மூடிக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு இனப்பிரச்சினைக்கான தீர்வை அறிவிப்போம் என்ற பழைய பல்லவியை நம்பி ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் இனிமேலும் தயாராகவும் இல்லை.
இது இந்நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மலையகம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடாகும்.
இந்த உறுதிப்பாட்டையே நான் எதிரொலிக்கின்றேன். |