

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் மே 16, 17, 18 நாட்களில் நடந்த தமிழர் இன அழித்தல் கொடுமைகளின் நெஞ்சடைக்கும் காட்சிகளை புகைப்படமாய் கண்டு நூறு புகழ்பெற்ற மனிதர்கள் இப்புத்தகத்தொகுப்பில் பதிவு செய்துள்ளார்கள். மனிதம் பட்டுப்போகவில்லையென்ற அறிவித்தலாகவும், மானுடம் வெல்லும் என்ற நம்பிக்கையாகவும் இப்பதிவுகள் அமைந்துள்ளன.
பத்திரிகையாளர்கள் அருந்ததி ராய், அனிதா பிரதாப், நக்கீரன் கோபால், ஆன்மீகப் பெரியோர்களான சத்குரு ஜக்கி வாசுதேவ், பேராயர் சின்னப்பா, திரையுலகின் கமல்ஹாசன், சூர்யா, பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ், சத்யராஜ், சீமான், சேரன், அமீர், பாலாஜி சக்தவேல், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின், கே.வி.ஆனந்த், லிங்குசாமி, ராதா மோகன், கவிஞர்கள் வைரமுத்து, இன்குலாப், அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், பா.விஜய், தபு சங்கர், யுகபாரதி, கலாப்ரியா, கல்யாண்ஜி, ஈரோடு தமிழன்பன், கல்வியாளர்கள் அனந்தகிருஷ்ணன், வசந்தி தேவி என சமூகத்தில் பெயரும் புகழும் பெற்று விளங்கும் நூறுபேர் ஆசிரியர்களாக இருந்து ஆக்கியுள்ள புத்தகம் இது.
'போருக்கு எதிரான பத்திரிகையாளர்' என்ற அமைப்பின் இருபது பத்திரிகையாளர்கள், நூறு பேரையும் தொடர்புகொண்டது முதல் புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்ததுவரை முழுப்பணியினையும் உள்ளார்ந்த மனிதநேயப் பிடிப்பிலும் ஆழ்ந்த தமிழுணர்விலும் நின்று செய்துள்ளார்கள்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகம் ஆக்கிய நூறு பேரில் பலர் பங்கேற்றனர்.
குற்றமற்றவர்களின் ரத்தம் பழிவாங்காமல் விடாது: பேராயர் சின்னப்பா
இன்று ராஜபக்சே சிரிக்கலாம். ஆனால் நான் செய்தது தவறு என்று மார்பிலே அறைந்துகொண்டு அழுது புலம்பும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் யேசு கிறிஸ்துவை சிலுவையிலே கொன்றார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இவனை கொன்றுவிட்டோம். இன்றோடு இவன் கதை முடிந்துவிட்டது. நம்முடைய வெறியை தணித்துக்கொண்டோம்.
ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் சொன்னார்கள். அங்குதான் யேசுவின் கதையே ஆரம்பித்தது. யேசு உயிர் துறந்த பிறகு, எந்த காரணத்திற்காக உயிர் துறந்தாரோ, ரத்தம் சிந்தினாரோ அதன் விளைவு ஆரம்பித்தது. மக்களுக்கு நன்மை கிடைத்தது.
குற்றமற்றவர்களின் ரத்தம் பழிவாங்காமல் விடாது. சாதாரண மனிதனின் ரத்தம் இலங்கை மண்ணில் ஊறிக்கொண்டிருக்கிறது. இன்னம் காயவில்லை. ரத்தத்தை உறுஞ்சிய ஈழ மண்ணில் என்ன விளைய போகிறது என்று பார்ப்பீர்கள். என்னை பொறுத்தவரையில் ஈழம் விளையும் என்றார்.
ஈழம் மௌனத்தின் வலி புகைப்படத்திற்கு இந்த உலகம் என்ன பதில் சொல்லப் போகிறது: முருகதாஸ்
கற்பனைக்கும் எட்டாத சிந்திக்க முடியாத ஒரு கொடூரம் என்பதை கேள்விபட்டிருந்தாலும் கூட, இந்த புத்தகதில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது, ஒரு காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏன் என்றால் இதில் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவே இல்லை. நம்ம அறிவுக்கு இதுவெல்லாம் வரவே இல்லை என்று நினைக்கும்போது யாரோட தப்பு. ஏன் இவ்வளவு தகவல் தொழில் நுட்பத்தில் பயங்கரமாக இருக்கிறோம். வானத்தை எட்டி விட்டோம் என்று சொல்கிறோம். அனால் இதுவெல்லாம் நமக்கு தெரியவே இல்லை என்று சொல்லும் போது வெட்கமாக இருக்கிறது.
ஒரு நார்த் இண்டியாவில் போய் இதையெல்லாம் சொன்னால் 'ய தி ஸ்ரீலங்கா பிராபலம்' என சாதாரணமாக கேட்பார்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டால், நிதி திரட்டுவதில் தமிழன் தான் முதல் இடத்தில் இருக்கணும். கார்கில் வார் நடந்தது என்றால் நிதி திரட்ட தமிழன்தான் முதல் இடத்தில் நிற்கணும். ஆனால் ஒரு இனம் அழிவது உங்க அறிவுக்கே வராதா? உங்களுக்கு அப்படி ஒன்று நடப்பதே தெரியாதா? யார் தப்பு இது. அரசியல் ஈகோவா? மதமா? இல்ல பழிவாங்கலா? எனக்கு தெரியல.
செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும்போது மரத்தில் உட்காந்திருப்பது குருவியா, காக்காவா என பார்க்கக்கூடிய அறிவியல், முகாம்களில் எத்தனை பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பதியவே இல்லையா? தமிழனை பார்த்தவுடனேயே அந்த கேமரா திரும்பிடுச்சா? போர் குற்றம் நடக்கிறது என்று ஐ.நா. சோதனை செய்ய வரும்போது, ஒரே நாளில் கிட்டதட்ட 50 ஆயிரம் தமிழர்கள் புல்டவுசரால் நசுக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாமே ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள். ஏன் என்றால் அவர்கள் அடையாளத்தை மறைக்கிறார்கள்.
பேசினால்தான் தமிழன். தமிழ் பேசும்போது தமிழனாகிறான். தமிழ் பேசும்போது கொலை செய்கிறார்கள். ஆனால் பேசாத குழந்தை. குழந்தைக்கு இன்னும் மொழியே தெரியாது. அந்த குழந்தை என்ன பாவம் செய்தது. அப்பாவி குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்கள்.
பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படைக் கூட ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள். அதாவது குழந்தைகள், பெண்களை கொலை செய்ய மாட்டோம் என்று. கூலிப்படைக்கு இருக்கிற ஒரு கட்டுப்பாடு கூட ஒரு ராணுவத்துக்கு கிடையாது.
அணுகுண்டுக்கும், புத்தகத்துக்கும் ஒரே வித்தியாசம்தான். அணுகுண்டு வீசும்போதெல்லாம் வெடிக்கும், புத்தகம் படிக்கும்போதெல்லாம் வெடிக்கும். இந்தப் புத்தகம் அந்த மாதிரியா புத்தகமாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவுக்கம் வியட்நாமுக்கும் நடந்த போரை தடுத்து நிறுத்தது ஒரே ஒரு புகைப்படம் தான். ஒரு சிறுமியின் நிர்வாணமாக நடந்து வருவதுபோல் உள்ள புகைப்படம்தான். இங்கு அதைவிட கொடூரமான புகைப்படங்கள் இருக்கின்றன. இந்தப் புகைப்படத்திற்கு இந்த உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது.
அப்பாவித் தமிழர்கள் எல்லாம் சாகும்போது, போர்க்குற்றம் என்றால், அதைப் பார்த்து வாய் மூடி, கண் மூடி இருப்பது வரலாற்றுக் குற்றம். |