இது தொடர்பாக அவர் கொழும்பு வாழ் தமிழ் வாக்காளர்களிடம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கொழும்பு மாவட்டத்தில் எமது தலைவர் மனோ கணேசனின் வருகையின் பின்புதான் தமிழ் மக்கள் எழுச்சிபெற்று பாராளுமன்ற தேர்தலிலே தமது இனத்து பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த ஆரம்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
அதே எழுச்சியோடு இம்முறையும் பாராளுமன்றத் தேர்தலிலே பெருவாரியான வாக்குகளால் எம்மை வெற்றி பெறச்செய்து கொழும்பு மாவட்டத் தமிழ் பிரதிநிதித்துவங்களை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளராகிய பிரபா கணேசன் தெரிவித்தார்.
நேற்று வடகொழும்பில் மேல்மாகாணசபை உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், சக வேட்பாளர் கலாநிதி குமரகுருபரன் மற்றும் அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரபா கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
கொழும்பு மாவட்டத்தில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகிய தரப்பினர் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றார்கள்.
தமிழ் மக்கள் ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் பேர் வாக்காளராக கொழும்பு மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த தொகையை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணியிலே மூன்று தமிழ் வேட்பாளர்களை களமிறக்கியிருந்தால் மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கும்.
ஆனால் இரண்டு தமிழ் வேட்பாளர்களை மாத்திரம் போட்டியிடவைத்து தமிழர்களின் மூன்றாவது விருப்பு வாக்கை பெரும்பான்மை இன வேட்பாளர்கள் கொள்ளையடித்து செல்வதற்கு வழி அமைத்துள்ளார்கள். எங்களுடன் மேல்மாகாணசபையில் அங்கம் வகிக்கும் சி.வை.பி.ராம் மூன்றாவது வேட்பாளராக தெரிவு செய்திருந்தால் நாம் நிச்சயமாக அவரையும் இணைத்துக்கொண்டு களமிறங்கியிருப்போம்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே மூன்று தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்தும் வருவதை விரும்பாத சில பெரும்பான்மை அரசியல்வாதிகள் மேல்மாகாணசபை உறுப்பினர் ராமிற்கு இடமளிக்காமல் தடைசெய்துள்ளார்கள்.
இவை அனைத்தையும் தமிழ் மக்கள் தெளிவாக புரிந்துக்கொண்டு சரியான முறையில் தமது விருப்பு வாக்குகளை பயன்படுத்தவேண்டும். அப்படி பயன்படுத்துவதன் மூலமாகத்தான் எமது தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும்.
மறுபுறத்தில் அரசாங்கத்தரப்பு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் இரண்டாயிம், மூவாயிரம் வாக்குளை மாத்திரம் பெற்று தமிழர் வாக்குகளை வீணடிக்கின்றார்கள். பெற்றுக்கொண்ட இரண்டாயிம், மூவாயிரம் வாக்குகளை ஜனாதிபதியின் காலடியிலே சமர்ப்பித்து தமது சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.
ஆகவே தமிழ் மக்கள் பெருவாரியான அளவில் வாக்களித்து, ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலிலே ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடுத்து அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெறுவது தமிழ் வேட்பாளர்களென உறுதிப்படுத்தவேண்டும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலிலே யானை சின்னத்திற்கு புள்ளடியிட்டு எமது வெற்றி இலக்கங்களான ஒன்பதாம்(09), பத்தாம்(10) இலக்கங்களுக்கு வாக்களித்து எமது வெற்றியை மகாவெற்றியாக ஆக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
பிரபா கணேசன் |