கனடாவில் "நாஷனல் போஸ்ட்' பத்திரிகையாளர் ஸ்ருவார்ட் பெல்லிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யுத்தம் ஒருவருடத்திற்குள் முடிவடைந்து விடுமென தான் கருதுவதாகவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் தேசிய தலைமைத்துவம் உள்ளதாகவும் எமக்கு வழங்கப்பட்ட இலக்கு பயங்கரவாதத்தை அழிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாயகத்தை விரும்பும் தமிழர்கள் யுத்தத்தை முன்னெடுத்து அதற்கான இடமாக இலங்கையைத் தெரிவு செய்திருப்பதாக கருதும் ஜெனரல் பொன்சேகா, இலங்கையின் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்கள் நாட்டை சிறுபான்மையினரான தமிழர்கள் துண்டாட ஒரு போதும் இடமளிக்க மாட்டார்களெனக் கூறியுள்ளார்.
மூன்று தசாப்தகாலமாக இராணுவத்தில் சேவையாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பொன்சேகா இந்த நாடு சிங்களவருக்கு சொந்தமானதென உறுதியாக நம்புகிறேன். ஆனால் இங்கு சிறுபான்மை சமூகங்கள் உள்ளன. எமது மக்கள் போன்றே நடத்துகின்றோம். நாம் நாட்டின் பெரும்பான்மையினர் 75% மாகவுள்ளோம். அதனை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாட்டைப் பாதுகாக்கும் உரிமை எமக்கு உண்டு. நாங்கள் வலிமையான தேசம். அவர்கள் எம்முடன் வாழ முடியும். ஆனால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் தேவையற்ற விடயங்களுக்கு அவர்கள் முயற்சிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
படையினரின் நடத்தை தொடர்பாகச் சர்வதேச மனித உரிமை குழுக்களின் விசனத்தை அவர் நிராகரித்துள்ளார்.
யுத்தத்தில் பொதுமக்கள் மரணங்கள் தவிர்க்கப்பட முடியாதவை என்று கூறும் அவர் இலங்கை மோதலில் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே போரில் சம்பந்தப்படாதவர்கள் இறந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
புலிகளிடம் 4 ஆயிரம் பேரே இருப்பதாகக் கூறியுள்ள இராணுவத் தளபதி இலங்கைப் படையில் 2 1/2 இலட்சம் பேரும் நிரம்ப ஆயுதங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
காட்டுக்குள் ஒவ்வொரு அங்குல இடத்திலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி கண்ணி வெடி அகற்றும் பணிக்குக் குறைந்தது 20 வருடங்களாவது செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். |