கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் தொழில்களில் ஈடுபட்டு வரும் 3,389 மீனவர்கள் தமது தொழில்சார் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 70 வீதமான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்ற போதும் மொத்தமாகவுள்ள 41,735 குடும்பங்களின் 4,205 மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இதில் தற்போது கரைச்சி கண்டாவளை பச்சலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சுமார் 128 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகளில் 3,389 பேர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைள் உள்ளிட்ட தொழில்களால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலான கரையோரப்பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மை உரிய தொழில் உபகரணங்கள் இன்மை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் உள்ள நன்னீர் குளங்களின் கீழ் நன்னீர் மீன்பிடிகளில் ஈடுபட்டு வரும் 750 வரையான குடும்பங்களும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.