வவுனியா-புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட இருந்த மரக் கடத்தல் இன்று(08) முறியடிக்கப்பட்டுள்ளதாகப் புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் மரக் கடத்தல் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வி.எஸ்.டி.விதானகே தலைமையில் மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் குறித்த முற்றுகை இடம்பெற்றது.
இதன் போது லான்ட் மாஸ்ரர் ரக வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்ட நிலையில் முதிரை மரங்கள் மீட்கப்பட்டதுடன் குறித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் புளியங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.