வவுனியா நகரப்பகுதியில் மின்சார சபையால் வெட்டப்பட்ட மரக்கிளைகள் பல நாட்கள் கடந்தும் அகற்றப்படாத நிலையில் காணப்படுவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்சார விநியோக இணைப்புக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலையில் இருந்த மரங்களினுடைய கிளைகள் மின்சார சபையால் கடந்த பல நாட்களுக்கு முன்னர் வெட்டப்பட்டிருந்தன.
அவ்வாறு வெட்டப்பட்ட மரக்கிளைகள் அவ்விடங்களில் இருந்து அகற்றப்படாத நிலையில் தற்போது வெயில் காரணமாக உலர்ந்து வீதிகளில் பரவலடைந்து போக்குவரத்து செய்பவர்களுக்கு இடையூறாக மாறியுள்ளது.
அத்துடன் வீதியில் நடமாடும் விலங்குகளும் அவற்றை பரப்பி வருகின்றன. இதனால் இதனை உடனடியாக அகற்றி மக்களின் இயல்பு நடவடிக்கைக்கு நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு வெட்டப்பட்ட மரக்கிளைகள் நீதிமன்றம், மாவட்ட செயலகம், பொலிஸ் நிலையம், மின்சார சபை வீதி என்பவற்றின் அருகில் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.