கடற்தொழிலில் ஈடுபடும் மீன்பிடிப்படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை இணையத்தளம் வழியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் அனைத்து மீன்பிடிப்படகுகளையும் நீரியல் வளங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சில் பதிவு செய்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் தூரப்பிரதேச மீனவர்களும் தமது படகுகளை பதிவு செய்வதற்காக கொழும்புக்கு வர வேண்டி இருந்ததுடன், இதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருக்கும் மீன்பிடித் திணைக்கள அலுவலகங்கள் வாயிலாக இணையத்தளம் வழியாக மீனவப் படகுகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் தற்போதைய நடைமுறையின் பிரகாரம் பழைய படகுகளை இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை வீதமும், புதிய படகுகளை ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை வீதமும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.