ஜனாதிபதியின் மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிலமெஹேவர என்னும் பெயரில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் வவுனியா பிரதேச செயலகத்தால் இன்று மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவையால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
நடமாடும் சேவைக்கு வருமாறு எமக்கு அறிவித்தல் வழங்கப்பட்டன. ஆனால் நாம் இங்கு வந்த போது நீங்கள் தேவையில்லை என சிலரை அனுப்பி வைத்துள்ளனர்.
சிலரிடம் நாம் ஏற்கனவே கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலகத்தில் காணி விண்ணப்பப்படிவத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களை மீள பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இங்கு காணி சம்மந்தமான பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் இருக்கவில்லை.
நடமாடும் சேவையை நடத்த வேண்டும் என்பதற்காகவும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முடிக்க வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒழுங்காக திட்டமிடப்படவில்லை. சன நெரிசலுக்குள்ளும், கடும் வெயிலுக்குள்ளும் சிக்கி பலரும் அவதிப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 30 ஆம் திகதி நடத்தவுள்ள நடமாடும் சேவையை என்றாலும் ஒழுங்காக நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, சனநெரிசலுக்குள் சிக்கிய நிலையில் இரு குழந்தைகளை ஊடகவியலாளர்கள் காப்பாற்றியிருந்ததுடன் நெரிசல் காரணமாக மக்கள் உத்தியோகத்தர்கள் போட்டிருந்த தடையையும் உடைத்துக் கொண்டு வெளியேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.