மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றுள்ளது.
பிள்ளையாரடியில் உள்ள தமிழ் சங்கத்திற்குரிய வளாகத்தில் இந்த திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிவரும் மட்டக்களப்பு தமிழ் சங்கத்திற்கான காணி பெறப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக வள்ளுவர் சிலை அமைக்கப்படவுள்ளதாக தமிழ் சங்கத்தின் தலைவர் கணேஸராஜா குறிப்பிட்டுள்ளார்.
கீரிமடு சித்திவிநாயகர் ஆலயத்தில் தர்மகர்த்த சிவஸ்ரீ ஜெகன் குருக்களின் தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று அடிக்கல் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மறவன்புலவுவாழ் தமிழ் பெரியார் சச்சிதானந்தம் அவர்களினால் தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டுள்ள 16 வள்ளுவர் சிலைகளுல் ஒன்று மட்டக்களப்பு தமிழ் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆவற்றினை ஸ்தாபிக்கும் வகையில் அதற்கான பீடம் அமைக்கப்பட்டு வைகாசி மாத நடுப்பகுதியில் திறப்பதுடன் தமிழ் சங்கத்திற்கான கட்டடத்திற்கு அடிக்கல் நடுவதற்கான நடவடிக்கையும் நடைபெற எதிர்பார்ப்பதாக சங்க தலைவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு, தமிழ் சங்கத்தின் தலைவர் கே.கணேஸராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் வி.தவராஜா,கமலநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம்,தமிழ் சங்கத்தின் துணைத்தலைவர் மு.செல்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, தமிழ் சங்கத்தின் புதிய கட்டட நிர்மாணப்பணிக்கு அனைவரையும் உதவுமாறும் இங்கு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.