யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 33 பொலிஸ் அதிகாரிகளுக்கு 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த நிகழ்வு கொழும்பில் இன்று இடம்பெற்றது.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குற்றபுலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சுதத் நாஹமுல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஏ.திசரா, பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்த பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை மாணவி வித்தியா கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு குற்றவாளிகளுக்க கடந்த மாதம் 27ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய நீதாய தீர்ப்பாயத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.