யாழ். ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு மாற்ற கடந்த மாதம் 24ஆம் திகதி நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது.
எனினும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இதுவரையில் விசாரணைகளை பொறுப்பெடுக்கவில்லை.
இந்த வழக்கினை பாரமெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இருந்து இதுவரையில் தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற வில்லை என குற்றப் புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.