மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின் பொருட்கள் கண்காட்சியும், பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, இருதயபுரம் மேற்கு, மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மண்முனை வடக்கு தையல் பயிற்சிகளுக்கான போதனாசிரியை நந்தினி அன்ரனி ராஜாவின் ஒழுங்கமைப்பில், மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மாலதி மகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற யுவதிகளுக்கு ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த வருடத்திற்கான பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் குறித்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர் ஜதிஸ்குமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்ததுடன் தையல் டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.மோகன் பிறேம்குமார், சிரேஷ்ட தையல் போதனாசிரியர் என்.ரவிச்சந்திரன், இருதயபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் சுகந்தினி ஜெகதர்சன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.