பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் சிங்கள மக்களது புலம்பெயர் அமைப்பான உலக இலங்கையர் பேரவையின் பிரதிநிதிகள் மூன்று பேர் அந்த நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டோபியாஸ் எல்வுட்டை சந்தித்துள்ளனர்.
நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக, இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கை ஒன்றையும் இந்த குழு அமைச்சரிடம் கையளித்துள்ளது.
கடந்த பெப்ரவரிமாதம் 4ம் திகதி லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர்.
இதன்போது உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியேர் பிரியங்க பெர்ணாண்டோ, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயற்பட்டிருந்தார்.
இதுதொடர்பான காணொளியும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து அவர் மீள இலங்கைக்கு அழைக்கப்பட்டு, தற்போது சீனாவிற்கு கற்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீள இலங்கைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்துள்ள குறித்த அமைப்பு, விடுதலைப்புலிகளது ஆதரவாளர்களின் செயற்பாடுகளினால் பிரித்தானியாவில் உள்ள (சிங்கள) இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.