திருகோணமலை மாவட்டத்தில் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த இருவரை இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டார்.
திருகோணமலை, ஆண்டாங்குளம், மிகுந்துபுர பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 23 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டாம் குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து பொலிஸார் சுற்றி வளைப்பினை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த சந்தேக நபர்கள் இருவரும் திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு, உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உப்புவெளி பொலிஸார் சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.