தாழிறக்கம் ஏற்பட்டிருந்த ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்பட்டு வருகின்றது.
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதி முழுமையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குள் சரிந்து மூழ்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை வீதியை அண்மித்த ஏனைய பகுதிகள் முற்றிலுமாக மண்சரிவுக்குட்பட்டு நீரில் மூழ்கியுள்ளன.
பிரதேச மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், உயிராபத்துகள் எவையும் இதுவரையில் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நிவ்வெளிகம பகுதி முழுமையாக காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் சரிந்து விழுந்துள்ளது.
இதனால் ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணிப்போர் காசல்ரீ, நோட்டன் ஊடாக மவுஸ்ஸாக்கலை சந்தியை அடைந்து அங்கிருந்து ஹட்டனை நோக்கி பயணிக்க முடியும் எனவும், பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் சாரதிகள் பொகவந்தலாவை - டின்சின் சந்தி ஊடாக டிக்கோயா நகருக்கு சென்று அங்கிருந்து ஹட்டன் நகரை நோக்கி செல்ல முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.