ஆசியாவின் அதிசயம் என கூறப்படும் தாமரைக் கோபுரத்தின் அமைப்பு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோபுரத்தின் சகல நிர்மாணப் பணிகளும் இந்த வருட இறுதிக்குள் நிறைவடையும் என்று அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க எதிர்பார்க்கப்படுதாகவும்” கூறியுள்ளார்.
இதேவேளை, தாமரைக் கோபுரத்தை அமைக்கும் பணிகள் கடந்த 2008ஆம் ஆரம்பமானது. இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை முன்னெடுத்தது.
இந்த நிர்மாணப் பணிகளுக்காக 10 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் உயரமான கட்டடமாக அது திகழும்.
350 மீற்றர் உயரமாக அமைக்க முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும் அது தற்போது 356 மீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மிக வேகமான மின்தூக்கியும் இதில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அது செக்கனுக்கு 7 மீற்றர் வரையில் செல்லக்கூடியது.
அத்துடன், அதிநவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாநாட்டு மண்டங்கள் அமைக்கப்பட்டதுடன், அந்த இரண்டு மண்டபங்களிலும் ஒரே தடவையில் சுமார் 700 பேர் வரை ஒன்று கூடுவதற்கான வசதிகளும் இதில் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.