அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்று முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் அரச வைத்திய சாலைகளில் உள்ள மருந்தாளர்களும் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் பிரதேச வைத்தியசாலை மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பினால் இன்று வைத்திய பரிசோதனைக்காக வருகை தந்த நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாமல் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தூர இடங்களில் இருந்து வந்த மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு, நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.