பத்தனை - டெவான் பிரதேசத்தில் பெண் ஒருவர் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நடத்தி வந்த பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, ஜா எல பகுதியை சேர்ந்த பெண் ஒருவரால் இந்த சட்டவிரோத பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் நடத்தப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த கசிப்பு தயாரிப்பு நிலையத்திலிருந்து நேற்று இரவு கொழும்புக்கு 2300 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பு லொறி ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது நாவலப்பிட்டி நகரில் வைத்து விசேட போதைபொருள் ஒழிப்பு அதிகாரிகள் குறித்த லொறியை மடக்கியுள்ளனர்.
அத்துடன் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே கசிப்பு தயாரிப்பு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அங்கு கசிப்பு நிலையத்திற்கு பொறுப்பான பெண் மற்றும் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல் முறையாக பெருந்தோட்ட பகுதியை உட்படுத்தி பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து, நாவலப்பிட்டி மற்றும் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.