நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், கிளிநொச்சி பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகிஸ்கரிப்பு போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்திற்கு ஆசிரிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலைகளிற்கு மாணவர்கள் வழமை போல் வருகை தந்திருந்த நிலையில் குறித்த போராட்டம் சுமார் அரை மணிநேரம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை பிரதான வாயிலை மறித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த போராட்டம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கையில்,
எமது பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்த ஹர்த்தால், பாடசாலை விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டும், மணவர்களின் கல்வி, பரீட்சைகளை கருத்தில் கொண்டும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களான நாம் குறித்த போராட்டத்தை அரை மணி நேரமாக மட்டுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
இன்று பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கம் மிகவும் மோசமாக உள்ளது. ஆசிரியர்களிற்கு வழங்கப்படும் கடமைகளுக்கு மேலதிகமாக எழுத்து வேலைகளும் அதிகமாக வழங்கப்படுகின்றது.
வெளிநாடுகளை போல் அல்லாது எமது கல்வி கற்பிக்கும் செயற்பாடானது மிகவும் மோசமாக உள்ளது. வெளிநாடுகளில் ஆசிரிய துறையை தேடி பலரும் விரும்பி செல்கின்றனர்.
இலங்கையில் ஆசிரியர் துறையிலிருந்து பலரும் விலகி வேறு வேலைகளை நோக்கி செல்கின்றனர்.
இவ்வாறன நிலை மாற்றப்பட்டு சீரான கல்வி செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.