காத்தான்குடியில் தகவல் திரட்டும் நோக்கில் வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்படும் விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மறு அறிவித்தல் வரை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அண்மைக்காலமாக காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் கலாசார சீர்கேடுகள் குறித்தும் பாதிப்புகள் குறித்தும் பொது மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக காத்தான்குடி நகர சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தகவல் திரட்டும் நோக்கில் வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்படும் விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை முற்றாகத் தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே தகவல் திரட்டும் நோக்கில் தங்கள் வீடுகளுக்கு வரும் விற்பனை முகவர்கள் தொடர்பில் அவதானமாக இருப்பதோடு, உடனடியாக நகர சபையின் கவனத்துக்கு கொண்டுவருமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
இது தொடர்பில் மொத்த வியாபார முகவர்கள் மற்றும் பொது மக்கள் நகர சபை அறிவித்தல்களை முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.