காலி - உனவட்டுன, யத்தேஹிமுல்லே பிரதேசத்தில் சுற்றுலா விடுதி உரிமையாளரான பெண்ணொருவர் இன்று அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மித்தோன் ஹவுஸ் என்ற சுற்றுலா விடுதியின் உரிமையாளராக ககே கங்கானம்கே திலுகா சாமலி விலாசிதா என்ற 34 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் தனது 7 வயது மகனுடன் விடுதியின் உணவகத்திற்குள் இருக்கும் போது நேற்று நள்ளிரவு 12.30 அளவில் மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு பேர் கூரிய ஆயுதத்தால் பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருப்பதாகவும், இருவருக்கும் இடையில் சொத்து சம்பந்தமாக நீண்ட காலமாக தகராறு இருந்து வருவதாகவும், மனைவியை கொலை செய்ய 30 லட்சம் ரூபா வழங்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் நீட்சியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.