கொட்டகலை - ரொசிட்டா நகர பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை ரொசிட்டா நகரில் உள்ள மதுபானசாலையின் முன் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்ட நபரொருவர் மதுபானசாலை உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மதுபானசாலையின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.