புகையிலை மற்றும் மதுபானம் காரணமாக இலங்கையில் தினமும் குறைந்தது 85 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
“கால் போத்தல்” நடைமுறை ஊடாகவே இலங்கை மக்கள் அதிக அளவில் மது அருந்துகின்றனர். அதனை ஒழிப்பதற்கான ஆணையிடும் சட்ட மசோதாக்களைக் கொண்டுவருவதற்கான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
2019ஆம் ஆண்டில் மாத்திரம் 300 மில்லியன் போத்தல்கள் சேர்க்கப்பட்டன. கண்ணாடி போத்தல்களை அப்படிச் சேர்க்கும்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு டெங்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகும்.
சமீபத்திய வருடங்களில் மாத்திரம் 160 - 190 மில்லியன் வெற்று பியர் கேன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 22% இலங்கை பெண்கள் தங்கள் சொந்த வீடுகளில் புகைபிடிப்பாளர்களால் பாதிக்கப்படுவது ஒரு சோகம். இலங்கையில் 11% பெண்கள் பணியிடத்தில் புகைபிடிப்பாளர்களால் பாதிக்கப்படுகின்றனர்.
புகையிலையுடன் வெற்றிலையை உட்கொள்வதால் ஏற்படும் வாய்வழி புற்றுநோயால் இலங்கையில் தினமும் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.