வவுனியா, கனராயன்குளம் வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரினால் கையகப்படுத்தப்பட்டிருந்த கனகராயன்குளம் வைத்தியசாலை காணி விடுவிக்கப்பட்டு புனர்நிர்மாண வேலைகள் நிறைவடைந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே வடமாகாண ஆளுநரால் குறித்த வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டு முழுமையாக சேவைகள் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
தற்போது புளியங்குளம் வைத்தியசாலை வைத்தியரே வாரத்தில் ஒரு நாள் கனராயன்குளம் வைத்தியசாலைக்கு கடமைக்கு செல்வதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சிறிய நோய்கள் மற்றும் விபத்துக்களுக்கு கூட கனராயன்குளத்தில் இருந்து தற்போது மாங்குளம் வைத்தியசாலை அல்லது புளியங்குளம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், உடனடியாக குறித்த வைத்தியசாலைக்கு வைத்தியரை நியமித்து தருமாறும் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.