மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீராவோடை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீராவோடை பாடசாலை முன்பாக ஹெரோயின் போதைப்பொருளுடன் 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மாவடிச்சேனை பகுதியில் வசிக்கும் 48 வயதுடையவர் என்றும் அவரிடமிருந்து 780 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஒருதொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள், பணம் என்பன வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.