வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு அண்மை நாட்களாக நெடுங்கேணி பொலிஸார் தடைவிதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த வழிபாட்டுத் தடைக்கு எதிராக விரைவில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆலயத்தில் வழிபாட்டிற்கு செல்வதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளமை தொடர்பில், ஆலய நிர்வாகத்தினர் நேற்றைய தினம் வவுனியா தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சுமந்திரனைச் சந்தித்து முறையிட்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கின்றன.
அதிலே பூசை செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடை தொடர்பாக அந்த ஆலயத்தினுடைய, பூர்வீகம், வரலாறு இவற்றையெல்லாம் வைத்து மக்கள் அங்கே வணங்குவதற்குரிய உரித்து அவர்களுக்கு இருக்கின்றது.
அதை எவரும் தடுக்க முடியாது என்ற ரீதியிலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உடனடியாக தாக்கல் செய்வதாக இருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.