கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த (ரத்னா ரவல்ஸ்) என்ற தனியார் பேருந்தில் பயணித்த மக்களையும், 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணித்த மக்களையும் உடனடியாக தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு ,பேலியகொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில், தப்பி வந்த நபரொருவர் மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு11.20 மணியளவில் மன்னார் நோக்கி பயணித்த (ரத்னா ரவல்ஸ்) என்ற தனியார் பேருந்தில் வருகை தந்து, 21 ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னாரில் இருந்து தலை மன்னார் நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணத்தைமேற்கொண்டு, மன்னார், புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு உரிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பேருந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.