தலவாக்கலை, சென் கிளயார் தோட்டத்தில் 22 வயதுடைய யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு - தெமட்டகொடையிலிருந்து குறித்த யுவதி தனது கணவர் சகிதம் கடந்த 16 ஆம் திகதி சென் கிளயார் பிரிவுக்கு வந்துள்ளார்.
கணவர், சில முரண்பாடுகள் காரணமாக லிந்துலை - லிப்பகலை தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
கொழும்பில் இருந்து வந்த காரணத்தால் குறித்த யுவதி பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கணவர் உட்பட அவருடன் பழகியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள யுவதி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, கினிகத்தேன பிளக்வோட்டர் பகுதியிலும் 19 வயது யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் வேலை செய்த நிலையில் கடந்த 10ஆம் திகதி அவர் ஊருக்கு திரும்பியுள்ளார். 19ஆம் திகதியன்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.