மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 24 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளதாக இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் எழுந்தமானமாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் காத்தான்குடி, ஆரையம்பதி சுகாதாரப் பிரிவுகளில் தலா 4 பேர் உட்பட 8 பேரும், வெல்லாவெளி சுகாதார பிரிவில் 3 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார பிரிவில் ஒருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 12 பேர் உட்பட 24 பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்டத்தில் 420 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 145 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். 278 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. எனவே பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.