இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்றில் மோதி படகு மூழ்கியதில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரினதும் சடலங்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கடற்பரப்பில் வைத்து இன்று முற்பகலில் இந்த உடல்கள் இந்தியக் கடலோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு கடலுக்கு அப்பால் உள்ள பகுதியில், 2021 ஜனவரி 18ஆம் திகதி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, தமிழக மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படை கப்பலுடன் மோதியுள்ளது.
இதன்போது இழுவைப்படகு சேதமடைந்த நிலையில் அதிலிருந்த நான்கு தமிழக மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது மரணமான தமிழக மீனவர்கள் நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே சடலங்கள் இந்தியக் கடலோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.