ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரி தமிழக இளைஞர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் தமிழ் நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக தங்கள் ஆதரவை தெரிவித்து லட்சக்கணக்கில் ஒன்று திரண்டனர்.
இன்று சென்னை மெரீனாக் கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டனர். இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம், இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நாளை பிரதமர் மோடியைச் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் கொண்டுவர வேண்டுவதாகவும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எனினும் போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் மட்டுமே தமது போராட்டம் நிறுத்தப்படும் என்றும், அதுவரை தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென்று நாளை முதல் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் சென்னையில் உள்ள 31 கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்னும் சில மணிநேரங்களில் ஏனைய கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவொருபுறமிருக்க, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதானது மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பவும், அவர்களின் போராட்டத்தை அடக்கவுமே இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என மாணவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். தமிழக மாணவர்களின் ஈழ ஆதரவுப் போராட்டம் வலுவடைந்தபோதும் அப்போதைய தி.மு.க. அரசு இதே முறையைக் கையாண்டே போராட்டத்தை முடக்கியது.
அதனைப் போன்றே இப்பொழுதும் மாணவர்களின் போராட்டத்தை முடக்க இவ்வரசாங்கம் முயற்சி செய்கிறதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.