அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தினை சுமந்திரன் ஆதரிப்பதனாலேயே அவருக்கு பிரிவினைவாதிகளால் உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பின் மூலம் சிங்கள மக்கள் குறிப்பாக பெரும்பான்மை இனத்தவரை மண்டியிட வைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பு என கூறினால், ஐக்கிய தேசிய கட்சியோ அதனை மறுத்து விடுகின்றது.
இவை அனைத்தும் அரசியல் யாப்பினை 3 இல் 2 பெரும்பான்மையை பெற்று நிறைவேற்றுவதற்கான நாடகமே என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் 13ஆம் திருத்த சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் மற்றும் காணிகளின் அதிகாரங்களை முதலமைச்சர்களின் கீழ் கொண்டுவர முனைகின்றனர்.
இதனை சுமந்திரன் ஆதரிப்பதால் அவரை கடுமையாக இனவாதம் பேசுபவர்கள் கொல்ல நினைக்கின்றனர் என அவர் மேலும் கூறினார்.