அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் மிக மிக அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னர், நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது. மாறிமாறி சந்திப்புக்களும், கலந்துரையாடல்களும் அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் வந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் இன்று அமைதியான முறையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சுசில் பிரேமஜெயந்த, தயாசிறி ஜெயசேகர ஆகியோர் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கக் கோரிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
எனினும், பிரதமருக்கு எதிராக பகிரங்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்த சுசில் பிரேம ஜெயந்தவும், தயாசிறி ஜெயசேகரவும் இன்னமும் அதே நிலைப்பாட்டிலேயே இருப்பதாக கூறபடுகிறது.
இந்நிலையில் அமைச்சரவையில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன, பேசப்பட்டன என்ற தகவல்கள் வெளிவராத போதிலும், கூட்டம் மிகவும் அமைதியாக நடைபெற்ற தகவல் மட்டும் இப்பொழுது வெளியாகியுள்ளது.