யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராணுவத்தினர் வட மாகாணத்தில் இருந்து வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக கோட்டையில் முகாமிடலாமே தவிர நிரந்தரமாக முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க கூடாது என பொது மக்கள் பல போராட்டங்கள் முன்னெடுத்த வரும் நிலையில், ஒல்லாந்த கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பில் இன்று முதலமைச்சரிடம் வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்திற்கு கொடுப்பததென்ற விடயம் சட்டமாக வரவில்லை. ஆனால், பலராலும் பேசப்படுகின்றது. வடமாகாண ஆளுநர் தான் இந்த விடயத்தினை ஆரம்பித்து வைத்தவர்.
அவ்வாறு இராணுவத்திற்கு ஒல்லாந்த கோட்டையைக் கொடுக்க வேண்டுமாயின் யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோர வேண்டும்.
வடமாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்த கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க முடியாது.
ஒல்லாந்த கோட்டை தொல்பொருள் சின்னம் என்பதனால், அங்கு படையினரை முகாமிட அனுமதித்தால், எவ்வாறான பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என்ற பிரச்சினையும் உள்ளது.
வடமாகாண சபை சுற்றுலா மையம் ஒன்றினை அமைக்க கோரிய போது, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், படையினர் வரும்போது, ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் புரியவில்லை.
சுற்றுலா மையம் அமைக்க கேட்ட போது, அனுமதிக்காத தொல்பொருள் திணைக்களம் இராணுவத்தினருக்கு ஒல்லாந்த கோட்டையை கொடுப்பது மனவருத்தத்தினை தருகின்றது.
அதேநேரம், இராணுவத்தினர் ஒல்லாந்த கோட்டையில் நிரந்தர முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.