முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் கேட்டுக்கொள்கிறேன் என நுவரெலியா மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்
ஹட்டன், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்சவை இந்த நாட்டின் பிரதமராக நியமித்து மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் என முழு நாட்டுக்கும் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவற்றை பொருட்படுத்தாது அலரி மாளிகையை தமது கைக்குள் வைத்து கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து அரச சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்.
எனவே, அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் கேட்டுக்கொள்கிறேன்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவையும் கொலை செய்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.
அதே நேரம் மத்திய வங்கி கொள்ளையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கியவர்களையே கைது செய்துள்ளார்கள்.
அத்தோடு ஊழியர் சேமலாப நிதி மோசடி தொடர்பாகவும் அவருக்கு நெருக்கமானவர்களையே கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு குற்ற செயல்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க துணையாக இருந்ததால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் என்ற வகையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தற்போது உருவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் வடக்கு மக்களின் உரிமையையும், அபிவிருத்திகளையும் வென்றெடுக்க முடியும்.
எனவே, சம்பந்தன் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.