இரணைமடுகுளத்தினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா என்பது மற்றும் அதன் முகாமைத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்ய புதிய விசாரணை குழுவை வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நியமித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் சமாளிக்க வேண்டிய சவால்கள் தொடர்பில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வைத்தே குறித்த புதிய விசாரணை குழுவை நியமிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சின் ஒன்றின் செயலாளராக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றிய இந்திரசேன மற்றும் மொறட்டுவ பல்கலைகழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் தலைவர் இரணைமடு விடயம் தொடர்பில் ஊடகங்களில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதால் அந்த குழு நிறுத்தப்பட்டு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் இன்று காலை இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.