இந்தியாவிற்கு அஞ்சியா இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
யுத்தம் இல்லாத நிலையில் எதற்கு பாதுகாப்பு அமைச்சிற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்த சிறிய நாட்டில் இராணுவத்தை பலப்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன? யாருக்கு எதிராகப் போரிட இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
அண்மையில் அரசியல் ஆய்வாளர் ஒருவரின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதில் இந்தியாவிற்கு அஞ்சியே பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இராணுவம் பலப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இவ்வாறு இந்தியாவிற்கு அஞ்சியா இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது என கேட்க விரும்புகின்றேன்.
யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஒதுக்கவேண்டிய நிதி, இராணுவத்தினருக்கு ஒதுக்குவதன் மூலம் நாடு அதல பாதாளத்திற்கு செல்கின்றது.
அத்துடன், யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வரவு செலவுத்திட்டதில் ஏதும் நன்மைகள் இருக்கின்றதா என கேட்டால் எதுவும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.