பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தான் எதிர்பார்த்ததை விட மிகப் பெரும் தந்திரசாலி என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா, ரத்தொளுகமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா இலங்கையில் காலூன்ற எடுத்த அனைத்து முயற்சிகளையும் சாமர்த்தியமான முறையில் தடுத்தவர் கோத்தபாய.
அந்த வகையில் அவர் மிகப் பெரும் சாமர்த்தியசாலி மட்டுமல்ல, மிகப் பெரும் தந்திரசாலியும் கூட.
ஆனால் இந்த அரசாங்கம் அமெரிக்காவின் அனைத்து நிபந்தனைகளுக்கும் தலையாட்டிக் கொண்டு இலங்கையில் காலுன்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முடக்கி வைத்துள்ளது.
புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தியுள்ளது. ஒரு சில புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை முறியடித்து நாட்டைப் பாதுகாக்கவும் பொருத்தமான ஒரே நபர் கோத்தபாயதான் என கூறியுள்ளார்.