விக்னேஸ்வரனின் கதை எனக்குத் தேவையில்லை, அதை மக்கள் தீர்மானிப்பார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும் வடக்கு, கிழக்கில் மொத்தமாக 20 ஆசனங்களை உறுதியாக பெறும் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவது உறுதி எனவும் வெற்றிப் பெற்று இலங்கையினுடைய தேசிய அரசியலில் மீண்டும் எதிர்க்கட்சி ஸ்தானத்துக்கு வரும் வல்லமை பெறும் என்பது உறுதியாக நம்பப்படுகின்ற ஒரு விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதுடன் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் அந்த அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கையில் உள்ளதுடன் நாங்கள் அரசியல் சாசனம் தீர்வை அடைவதற்கு உரிய வாசலில் நின்று கொண்டிருக்கின்றோம்.
அந்தத் தீர்வு அடுத்த நாடாளுமன்றத்தில் எங்களுக்கு கிடைக்கும் என்பதில் மிகத் திடகாத்திரமான உறுதியுடன் நாங்கள் இருக்கின்றோம். 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து திருகோணமலையில் இரண்டு ஆசனங்களைப் பெறவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.