ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அந்த கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கௌரவமாக விலக கிடைத்த பல வாய்ப்புகளை ரணில் விக்ரமசிங்க தவறவிட்டதாகவும் சுமார் 50 லட்சம் ஐக்கிய தேசியக்கட்சியினர் கைவிடப்பட்ட பெரிய குற்றத்திற்கான பொறுப்பை அவரே ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளனர்.
தேர்தல் முடிவுகளின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ள இவர்கள், இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
இரண்டாக பிளவுப்பட்டுள்ள கட்சியை மீண்டும் ஒன்றுப்படுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் சூழலை உருவாக்க உடனடியாக கட்சியின் செயற்குழுவை கூட்டுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இம்முறை பொதுத் தேர்தலில் அடைந்த தோல்வி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பெரிதாக பிரதிபலிக்கும் எனவும் அவர்கள், கட்சியின் தலைவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, தான் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசத்துடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதாக கூறியுள்ளார்.