9வது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுங்க தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை துரிதமாக ஆரம்பிக்க உள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ள 79 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதுடன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில வாரங்களுக்குள் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
சுங்க வரி தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 65 லட்சம் ரூபாய் வரி மானியத்திற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
தற்போது வாகனங்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த தடை நீக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.
அதேவேளை அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சுங்க தீர்வையின்றி வாகனஙகளை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. அரச ஊழியர்கள் 36 லட்சம் ரூபாய் வரி மானியத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்துக்கொள்ளலாம்.