இலங்கை என்ற எங்கள் தேசத்தின் ஜனநாயகத்தை 20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ராஜபக்ச அரசு கொலை செய்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இது தொடரில் அவர் மேலும் கூறியதாவது,
"20வது திருத்தச் சட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளது ராஜபக்ச அரசு.
இதனூடாகத் தங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் விருப்பத்துக்கு எதிராக ராஜபக்ச அரசு எதேச்சதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது" - என்றார்.
முன்னதாக 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன.
அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.