ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் என 200 பேரை கைது செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அதற்கான பெயர் பட்டியல் ஏற்கனவே பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச இளம் தலைவராக மனித உரிமைகள் குறித்து அச்சமின்றி பேசிய தலைவர் என்பது எமக்கு தெரியும். எனினும் தற்போது என்ன நடக்கின்றது?.
ஊடகவியலாளர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவதால், கைது செய்யப்படுவது அண்மைய காலமாக அதிகரித்துள்ளது.
இது மிகவும் கவலைக்குரிய நிலைமை. கைது செய்யுமாறு கூறி 200 பேரின் பெயர் விபரங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இப்படி செய்ய வேண்டாம். சர்வாதிகார பயணத்திற்கு எமது நாட்டு மக்கள் ஆசி வழங்க மாட்டார்கள். இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவை பாருங்கள். சர்வாதிகார பயணத்தை செல்ல முயற்சித்த காரணத்தினால், 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் படுதோல்வி ஏற்பட்டது எனவும் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.