மன்னார் மறைமாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நேற்று மாலை விசேட பிரார்தனை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மனுவல் பெர்னாண்டோ ஆண்டகையால், கொரோனா கொடிய நோய் தாக்கம் நீங்கவும், வைத்தியம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு நற்சுகம், இறை ஆசீர் கிடைக்கவும் வேண்டி இவ் விசேட பிரார்தனை கூட்டுத்திருப்பலி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
நற்கருணை ஆராதனை திருப்பலி அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் என்பனவும் இடம்பெற்றுள்ளன. குறித்த விசேட பிரார்தனை திருப்பலி என்பன மும்மொழிகளிலும் இடம் பெற்றது.
குறித்த ஆலயம் அமைந்த பகுதியில் 1544ம் ஆண்டு கிறிஸ்தவ விசுவாச வாழ்கை வாழ்ந்த சுமார் 600 கிறிஸ்தவர்கள் வேதசாட்சிகளாக கொல்லப்பட்ட இடமாகவும் கத்தோலிக்க திருச்சபையின் புனித யாத்திரைத்தலமாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.