இலங்கையில் தரையிறக்கப்பட்ட வெளிநாட்டு விமானம் தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையின் நிலப்பரப்பை ஆய்வு செய்யும் நோக்கில் இந்த விமானம் இலங்கை ஊடாக இந்தியா பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவுக்கு சொந்தமான அதிவிசேட வசதிகளை கொண்ட விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் மூலம் பூமிக்கு கீழ் 800 மீற்றர் ஆழத்தை ஸ்கேன் செய்யும் வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானம் தென்னாபிரிக்காவில் பதிவு செய்யப்பட்ட spectrem air property என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான HC - 47 ரக விமானம் ஒன்றாகும்.
இந்த விமானம் பறந்து கொண்டிருக்கும் போது 10000 அடி வரை கீழ் நோக்கி கொண்டு வந்தால் பூமிக்கு கீழ் 800 மீற்றர் வரையான ஆழமுள்ள பிரதேசங்களை சோதனையிடும் வசதிகளை கொண்டுள்ளது.
இந்த விமான நிறுவனத்திடம் இது போன்ற பாரிய அளவிலான விமானங்கள் உள்ள நிலையில், அவர்கள் இவ்வாறு பல்வேறு நாடுகளுக்கு சென்று பூமியை சோதனையிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த விமானத்தின் ஊழியர்கள் மூவரும் இவ்வாறு இலங்கை வந்துள்ள நிலையில் இலங்கையில் நிலக்கீழ் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விமானம் இன்றைய தினம் எரிபொருள் நிரப்பிக் கொண்டு இன்று மெனிலா நகரத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் கடற்பரப்பில் அதிகளவான பெற்றோலிய வளம் இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.